mardi 25 novembre 2014

மாலை...

மாலை...
 
வாசம் மிகு பூப்பறித்து வண்ண வண்ண மாலை கட்டி கூந்தலிலே சூடியதொரு காலம், மகளே விழிகளிலே ஏன் இன்று வீரக் கனல் கோலம்
 
காய்ந்த நெஞ்சில் ஈரம் இல்லை காயம் பட்ட உடல் ஆறவில்லை கானலிலே கரைந்ததேன் சுதந்திரம், அன்னையே நான் தேடுகிறேன் தென்றல் தொடும் காலம்
 
நெற்றியிலே பொட்டெங்கே நீண்ட சடை பின்னல் எங்கே பூமாலை சூட மறந்தாய் இக்காலம், மகளே எங்கே போகிறாய் ஏன் இந்தக்கோலம்
 
காதலென்றும் மோகமென்றும் காயம் செய்யும் விழி புனைந்து புத்திகெட்டு போனதொருகாலம், தாயே போகட்டும் இது இரெத்தம் சிந்தி போரிடும் நேரம்
 
பட்டுச் சேலை பொட்டும் பூவும் தங்கமாலை தாலிச்சறடும் உன் கழுத்தை ஆழவேண்டும் மகளே என்னைவிட்டு ஏன் நீ செல்லவேண்டும்
 
நஞ்சுமாலை அணிந்தேனம்மா நாடு மீட்க போகிறேன் நான், உன்னை விட்டுச் செல்லவில்லை இமை கண்ணை விட்டகலுமோ சொல் தாயே
 
முல்லை மலரென்றே உன் முகம் பாத்திருந்தேன் ஐயன் நிழலும் இன்றி வாடி வீழ்ந்துவிட்டேன் மணமால காயும் முன்பே மலர்வளையம் வைத்தேன் மகளே, இனவாதத் தீயிலே இரையானார் தந்தையன்றே உன் துணை வேண்டும் எனக்கு இருப்பாயா என் மகளே
 
ஓயாத அலைபாயும் ஈழத்தாய் நாடம்மா கரிகாலன் படையிருக்க கலக்கம் ஏனம்மா உனைக் காண நான் வருவேன், என் பிஞ்சுமகன் விளையாட தமிழீழம் மீட்டுட போறேன்
 
போகாதே என்று சொல்ல போராடுது நெஞ்சம் மகளே, ஊரோடு சேர்ந்துண்டு உறங்கும் நாள் வரும் என்று உறங்காமல் விழித்திருப்பேன் உன் பாதம் காணும்வரை
 
படை கண்டு அஞ்சவில்லை காலனிடம் கலக்கம் இல்லை விடைகொடு தாயே விடியும்வேளை வீடு நான் திரும்புவேன்
 
விடுதலை பறவையே விலங்குடைத்து விரைந்துவா பூமாலை கட்டிவைப்பேன் பூமகளே புயல் கண்டு இனி அஞ்சேன் நான்...
 
Kavignar Valvai Suyen
 
18.05.2000,த்தில் மாலை, எனும் தலைப்பில் பெண் புலிகளை நினைந்தெழுதி I B C , வானலைகளில் வலம் வந்து மனமுருகி வயல் வெளியில் எனும் என் கன்னிக்கவிதை நூலிலும் இருக்கின்றது இக்கவிதை.  தாயோடும் சேயோடும்  மாசுபடா மலரெடுத்து நான் தொடுத்த மாலை இது சூடிகொள்ளுங்கள் பெண் புலி தங்கைகளே..  

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...