பனி மலை இடுக்கின் பாரியாதங்களே
வசந்த காலம் வந்ததோ,
பூத்துக் குலுங்குகிறீர்
நடு நிசி நரிகளின் ஓலம் கேக்கிறது
நாளை இடியுடன் கூடிய புயலும் வரும்
பூவும் பிஞ்சும் உதிரும்
பூத்த கொடியில் உதிரம் சிந்தும்
ஆற்றொணா துயரில் கிளைகளும் ஒடியும்
தமிழா இன மான வேர் அறுந்தால்
எந்த மண்ணிலும் வாழ்வில்லை உனக்கு
முற்றத்து வேம்பும் சுற்றத்து ஆலும்
முப்பத்திரெண்டு ஆண்டுகள்
விழுதூன்றிய காலம் அது
உலக அரங்கம்
அஞ்சலில் தந்த முகம் உனது
நின்றாளும் தமிழுக்கு நிலையான அரசொன்று
உலகாள் அரங்கில் புலிக்கொடி உயர்ந்து
தமிழீழப் புலிகளே தந்தார் ஈகம் அதற்கு
நீசரது சதி நிலையாலே நிலை சாய்ந்தோம்
விலை ஏது கொடுத்த உயிர்களுக்கு
நினைவிழக்குமோ அந்த முள்ளிக் கடல்
அதன் அலைகள் இசைக்கிதே இன்றும்
முகாரி
வாழ்வாதாரம் இழந்து வாழ்வியல் ஒடுங்கி
கூடார வாழ்வில் குடியானோம்
சேதாரம் ஆகாரம் ஆனது
சொரிந்த விழி நீர் வற்றி செங்குருதி ஓடி
உறவிழந்த துயரினை மறப்போமா
மற எங்கிறீர் அடி வருடிகளே
கச்சைத் துணியும் இன்றி
எஞ்சிப் பிழைத்த ஒற்றை உயிரடா இது
சுய உரிமை சுயாட்சி இன்றி சுதந்திரம் ஏதடா
கொடும் துயர் நெடுங் காடேகி
சுமக்கின்றோம் இன்னல்கள் இன்னும்
சுக போக வாழ்விற்கென நீ வாங்கிய பெட்டிப் பணம்
இழப்புக்கு ஈடாகுமா மாண்டவரெல்லாம் மீழ்வாரா
உறவிழந்து எஞ்சிய ஜீவன்களிடம்
ஒரு நொடியேனும் பேசிப்பார் சுமந்திரா
அவ்வேளையேனும் உன் அறிவுக் கண்கள் திறக்கலாம்
நெஞ்சுருக நினைவுருக
முள்ளி வாய்க்கால் வஞ்சம்தனை
நீக்கமற நினைந்தே வெஞ்சினம் உருக
செங்குருதி அலை வந்து கரை தொட்டுப் போகிறது
நாளை ஏனும் விடியாதோ தமிழீழம் என்று
பாவலர் வல்வை சுயேன் 18.05.2020
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...