வையகம் ஓங்குக !!!
புது யுகத்தில்
மறு மலர்ச்சி
முடிந்த வாழ்வென
மடிந்து சாவோமா
கடந்து
செல்லும் பாதை நோக்கி
எழுந்து போகின்றேன்
வரைமுறை
வாழ்விற்கு வழி தேடுவேன்
துயர் கூடி
துடக்கி முடக்கி மூழ்கிடினும்
வேற்றடி
வீழ்ந்து வெந்து சாவேனோ
ஆதி மொழியே எங்கள் தமிழ் மொழி
ஏடும்
எழுத்தாணியும் தந்த, தாய் மொழி
ஆற்றலும்
அறிவும் கூற்றும் குன்றா தொழுகி
மறை நூல் பற்றி
மனமிசை பாடுங்கள்
தன்னிகர் தானுற்று தமிழ் ஓங்கவே
பாரினில் போற்றுவோம்
செந்தமிழ் பாக்களை
தோற்றும் தலை
முறை தொன்மை போற்றவே
எண்ணும் எழுத்தும்
கண்ணென காண்போம்
வாழ்வியல் பேரின்பம் வளமுற வாழ்கவே
கைத்தலம் பற்றி
நித்திலம் கொழித்தே
வான் துணை கூடி
வையகம் ஓங்கட்டும்
மேன்மை கொள்
தமிழே மேதினி ஆள்க நீ
பாவலர் வல்வை
சுயேன் – 06.04.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...