lundi 5 octobre 2020

உஷா !!!

என் பெயர் உஷா

சிறிய சாளரம் எங்கள் வீடு

ஆங்காங்கே கூரையின் சிதறல்கள்

சூரிய ஒளியும் மழையின் தூறலும்

வறுமைக் கோட்டை அளந்தபடி

நாளாந்தம் எங்கள் வீட்டுக்குள்

வந்து போகின்றன


இது அவர்களுக்காக போடப்பட்ட

வாசல் கதவுகள் அல்ல

யுத்தம் என்று சொல்லி

நித்தம் வந்து

எம் வாழ்விலும் எமது வீட்டிலும்

பகைவனின் போர் விமானங்கள்

கொத்தணிக் குண்டுகளால் சிதைத்த

விழுப் புண்கள்

 

மாற்றுக் கூரை போடுவதற்கு

வருமானம் போதவில்லை

குடும்பத் தலைவனும்

குண்டடிபட்டு போய்விட்டான்

குடும்ப எண்ணிக்கையில்

மாண்டவர் பாதி

எஞ்சியவர் மீதி

 

இளமை அழிந்தும் முதுமையோடு

புதுச் சட்டைகள் தைத்துத் தைத்து

ஓடிக்கொண்டே இருக்கின்றேன் 

திண்ணையில்

 

ஓடிய தூரம் தெரியவில்லை

தேசங்கள் கடந்து ஓடியிருப்பேன்

தணியாத் தாகம் எனக்கும் உண்டு

அவ்வப் போது ஓயில் சிந்தி

என் நாவை நனைத்து விடுவாள்

பாவம் தேனீரும் அருந்தாள்

என் தோழி

 

வேதனை விழிம்பில் விம்மிச் சினந்து

பொவின் நூல்கள் சிக்கித் தடுமாற

உள்ளம் நொந்து

ஊசியும் உடைந்துவிடும்

 

தன் பசி அடக்கி

மாற்றூசி வாங்கிவிடுவாள் தோழி

யார் யாருக்கோ எல்லாம்

சட்டை தைக்கும் நான்

என் தோழிக்காக ஒரு புதுச் சட்டை

தைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம்

எனக்குள்ளே

ஆனால் இயலவில்லை

குடும்ப ஏழ்மை என் தோழியை

துரத்திக் கொண்டே இருக்கிறது

 

ஒட்டுப் போட்ட சட்டைகளையாவது

இடை இடையே கந்தல் இன்றி

தைத்துக் கொடுக்கும் மகிழ்வோடு

என் தோழியின் கால்களை

முத்தம் இடுகின்றேன்

பயணம் முடியவில்லை

இப்படிக்கு – உஷா

 

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...